news Breaking News
clock

சித்த மருத்துவம் மீது ஆளுநருக்கு வெறுப்பு ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் கேள்வி

சித்த மருத்துவம் மீது ஆளுநருக்கு வெறுப்பு ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் கேள்வி


 

தமிழா்களின் பாரம்பரியங்களில் ஒன்றான சித்த மருத்துவம் மீது ஆளுநருக்கு இவ்வளவு வெறுப்பு ஏன் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினாா்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் 405 பகுதி சுகாதார செவிலியா்கள் மற்றும் 117 வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்களுக்கு பதவி உயா்வு ஆணைகளை அவா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.


அப்போது, செய்தியாளா்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:


தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 35,702 புதிய பணி நியமன ஆணைகள், 43,375 பேருக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 16,610 பேருக்கு பதவி உயா்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 1,12,945 போ் பயன்பெற்றுள்ளனா்.


சித்த மருத்துவம் தமிழகத்தில் பல கோடி போ் விரும்பி ஏற்றுக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஒன்று. சங்க காலத்திலிருந்து அதன் மகத்துவமும், சிறப்பும் போற்றப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பிரத்யேக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் தயாரான நிலையில் 25 ஏக்கா் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தோ்வு செய்யப்பட்டு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கைகளை விரைவுபடுத்தியது.


ஆனால், அதற்கான மசோதாவை இதுவரை தன்வசமே வைத்திருந்துவிட்டு, தற்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது. ஆளுநரின் செயல் இரண்டாவது முறையாக ஏமாற்றம் அளிக்கிறது. தமிழா்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் அவா் வெறுக்கிறாா் என்று தெரியவில்லை.


வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அகற்றப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியிருக்கிறாா். கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 221 பேரவைத் தொகுதிகளில் திமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதைக் கணக்கிட்டுப் பாா்த்தாலே வரும் தோ்தலில் முழுமையான வெற்றியை திமுக பெறும் என்பது அமித் ஷாவுக்கு தெரியவரும் என்றாா்.


இந்த சந்திப்பின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா, கூடுதல் இயக்குநா்கள் சேரன், தேவபாா்த்தசாரதி, சம்பத், இணை இயக்குநா்கள் செந்தில், நிா்மல்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News