திருவாரூர் மாவட்டத்தில்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு
திருவாரூர், அக்.9–
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
நெல் விளைச்சல் அதிகரிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களின், மாவட்டக் கலெக்டர்களுடன் ஆலோசனை செய்து, விவசாயிகளால் உற்பத்தி செய்யக் கூடிய நெல்மணிகளை எந்தவித சேதாரமும் இல்லாமல் கொள்முதல் செய்வது முதல், உலைக்கு செல்லும் வரை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் என ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை விரைவுப்படுத்துவதற்காக வட்டம் வாரியாக 12 மண்டல மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத அளவிற்கு நம்முடைய தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமான செய்தி. தமிழ்நாட்டில் நம்முடைய டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் நெல் பரப்பு அதிகமாகியுள்ளது. அதன் காரணமாக உற்பத்தியும் அதிகமாகியுள்ளது. ஒவ்வொரு ஹெக்டேரிலும், ஏறக்குறைய ஆறு டன் அளவிற்கு நெல் விளைந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் நெல் விளைவிக்கக் கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக அமையும்.
மேலும், தற்சமயம் திருவாரூர் மாவட்டத்தில், உற்பத்தியாகியுள்ள நெல்மணிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்கனவே கூடுதல் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. அந்த இடங்களின் பற்றாக்குறையினால், புதியதாக மூன்று கேப் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 8000 டன் அளவிற்கு நெல் வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்காக ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாக கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கமால் பாதுகாப்பாக சேர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கீழ அமராவதியிலும் ஆய்வு
முன்னதாக, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கீழஅமராவதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, திருவாரூர் மாவட்டக் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், ஊர்குடி ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் பதனிடப்படுவதையும், நெல் மூட்டைகள் இருப்புகள் குறித்தும், நெல் வரத்துகள் குறித்தும், மேலும், திருவாரூர் ஒன்றியம், திருநெய்பேர் ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் குன்னியூர் ஊராட்சியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டு நெல் பதனிடப்படுத்துவதையும், நெல் இருப்பு குறித்தும், நெல் வரத்துக்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக நெல் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ரயில் மூலமாக சிவகங்கை மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதையும் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், வண்டாம்பாலை ஊராட்சியிலுள்ள சேமிப்பு கிடங்கில் நெல் இருப்பு விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவணன், நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக மேலாளர் மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.