தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ஆம்னி பஸ்சில் ரூ.5 ஆயிரம் கட்டணம் ‘‘கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என அமைச்சர் எச்சரிக்கை
சென்னை, அக். 12–
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ஆம்னி பஸ்சில் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கண்காணிப்பு குழு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்எனவும் அமைச்சர் கூறினார்.
கல்வி, பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போர், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய 2 நாட்களும் வார இறுதி விடுமுறை என்பதால், 17-ம் தேதியே ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகை வரும் 20–ந்தே வருவதையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.
அதிக கட்டணம் வசூலிப்பதா?
காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.
சொந்த ஊர் செல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
மும்மடங்கு உயர்வு
சென்னையில் இருந்து நெல்லைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.
எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்று அதிக கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.
மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
அமைச்சர் எச்சரிக்கை
இந்நிலையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று கண்காணிப்புகள் மேற்கொள்வர்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.