நாகாவதி அணையில் இருந்து 100 நாட்களுக்கு பாசன நீர் திறப்பு

நாகாவதி அணையில் இருந்து 100 நாட்களுக்கு பாசன நீர் திறப்பு



தருமபுரி, பிப். –


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எர்ரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாகாவதி அணையிலிருந்து 2025–26ஆம் ஆண்டுக்கான இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.


கலெக்டர் ரெ. சதீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் மணி முன்னிலையில் நேற்று (பிப்ரவரி 16) அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.


அரசு ஆணைப்படி, பிப்ரவரி 16 முதல் மே 26 வரை மொத்தம் 100 நாட்களுக்கு முறைப்படி பாசன நீர் விடப்படும். முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்த 5 நாட்களுக்கு மற்றொரு மண்டலத்திற்கும் தண்ணீர் விடப்பட்டு, பின்னர் 5 நாட்கள் நிறுத்தி, இவ்வாறு மொத்தம் 7 நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கனஅடி தண்ணீர் தலைமை மதகின் வழியாக வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாகாவதி நீர்த்தேக்கத்தில் தற்போது உள்ள நீர்வரத்து நிலையை கருத்தில் கொண்டு, பென்னாகரம் வட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமங்களில் உள்ள 1,993 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.


விவசாயிகள் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.


நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%