பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.2.17 கோடி மதிப்பில் புதிய சிடி ஸ்கேன் கருவி
பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.2.17 கோடி மதிப்பில் புதிய சிடி ஸ்கேன் கருவி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
கோவை, பிப். –
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.2.17 கோடி மதிப்பில் புதிய சி.டி. ஸ்கேன் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பல்வேறு சுகாதார உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு புதிய கட்டிடம், ரூ.10 கோடி மதிப்பில் வெளிநோயாளர் பிரிவு, ரூ.1.25 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆய்வகம், ரூ.2 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை உள்நோயாளர் பிரிவு, ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டண பிரிவு, ரூ.62 லட்சம் மதிப்பில் நுண்துளை அறுவை சிகிச்சை கருவி, ரூ.75 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சி.டி. ஸ்கேன் கருவி ஒன்றே செயல்பாட்டில் இருந்த நிலையில், தினமும் சுமார் 700 ஸ்கேன்கள் எடுக்க வேண்டிய தேவை இருப்பதால் புதிய நவீன சி.டி. ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டது. இதன் மூலம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.
1934ஆம் ஆண்டு துவக்கம்
இந்த மருத்துவமனை 1934ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தினசரி 1,500 புறநோயாளிகளும், 450 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 24 சி.டி. ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக 14 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.20,000 செலவாகும் இந்த தடுப்பூசி, அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,38,649 இளம் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?