மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: ஸ்டாலின் பார்வையிட்டார்

மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: ஸ்டாலின் பார்வையிட்டார்




சென்னை, அக்.1–


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், 42.45 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை பார்வையிட்டார்.


சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக அனுமதி வழங்கியது.


தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் அமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.


ஆராய்ச்சி மையம்


குறிப்பாக, ‘தொல்காப்பியப் பூங்கா’, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் கல்வியினை சமுதாயத்திற்கு, குறிப்பாக மாணவர்கள் பயன்பெற்றிடும் வகையில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை, 1,446 பள்ளிகளைச் சேர்ந்த, 1,12,826 மாணவர்கள் மற்றும் 6,070 ஆசிரியர்கள், இப்பூங்காவில் நடத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் பங்குபெற்று பயனடைந்ததுடன், நகர்ப்புர ஈரநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தினை உணர்ந்துள்ளனர். இதுவரை, இப்பூங்காவினை 32,973 பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர்.


நடைபயிற்சி பாதை


இயற்கை சூழ்நிலை நிறைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 3.20 கிலோ மீட்டர் தூர நடைப்பயிற்சி பாதையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள முதலமைச்சர் 12.05.2022 அன்று அனுமதி வழங்கி, இதுவரை 24,528 நபர்கள் பயனடைந்துள்ளனர்.


முதலமைச்சர் இன்றையதினம் தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு, கொன்றை மரக்கன்றினை நட்டு வைத்தார். மேலும், தொல்காப்பியப் பூங்காவினை மக்களின் முழு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%