ரூ.3,510 கோடி முதலீட்டில் கேஎல்ஏ இந்தியா ஆராய்ச்சி மையம்

ரூ.3,510 கோடி முதலீட்டில் கேஎல்ஏ இந்தியா ஆராய்ச்சி மையம்



சென்னை, பிப்.

- அமெரிக்காவின் கேஎல்ஏ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஎல்ஏ இந்தியா லிமிடெட், சென்னையில் 3,510 கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைக்க வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 12 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் துறைக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான கேஎல்ஏ கார்ப்பரேஷன், சிப் உற்பத்தியில் பயன்படும் ஆய்வு, அளவீடு மற்றும் தரவு பகுப்பாய்வு அமைப்புகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முன்னணி சிப் உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளை வழங்கி, புதிய தலைமுறை செமிகண்டக்டர் வளர்ச்சியில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கான இலக்கை அடைய, அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிர் அறிவியல், புத்தொழில், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய திறன் மையங்கள் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்த்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், அரசு உயர் அதிகாரிகள், கேஎல்ஏ நிறுவனத்தின் அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%