24–ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு பசும்பொன்னில் இன்று பந்தக்கால் நடப்பட்டது
பசும்பொன், பிப்.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருகிற 24–ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பசும்பொன்னில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகவும், தனது புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளைம், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.தி .மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.
மறைந்த அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் அரசியல் நிகழ்வுகளிலும் பயணித்து வந்தார். அதனால், அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை 'அம்மா' என்றும், சசிகலாவை ‘சின்னம்மா’ என்றும் அழைத்து வந்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் 4 ஆண்டு சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அரசியல் நிலைமை எல்லாம் மாறிப்போய் இருந்தது. அரசியலை விட்டு ஒதுங்கிய அவர், தனது ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து பேசிவந்தார்.
இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, தென்மாவட்டத்தில் தனக்கு செல்வாக்குள்ள 25 தொகுதிகளில், ஆதரவாளர்களை களம் இறக்க சசிகலா திட்டமிட்டு இருப்பதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்' என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார்.