27–ந் தேதி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா

27–ந் தேதி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா

சென்னை, செப்.25–


நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 27–ந் தேதி வேளாண் வணிகத் திருவிழா 2025 -நடைபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27–ந் தேதி அன்று தொடங்கி வைக்கிறார். மேலும் உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.


28–ந் தேதியும் இத்திருவிழா நடைபெறும்.


உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தத் திருவிழாவில் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.கருத்து விளக்கக் கண்காட்சி அரங்குகள்


சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம். பனை, தென்னை, ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், நகர்ப்புரத் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நீர்ஊடகத் தோட்டம்,


ஊட்டச்சத்து வேளாண்மை, பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள். தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு இயந்திரம், பருப்பு உடைக்கும் இயந்திரம் போன்ற மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும்.


கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள்


உழவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், உணவே மருந்து, நகர வாழ்க்கையில் ஆரோக்கிய உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரிவிகித உணவு, உணவு பதப்படுத்துதலும் மதிப்புக்கூட்டுதலும், காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் மாடித்தோட்டம் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்,


வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல், உழவர்களுக்கான மின்னணு சந்தைப்படுத்துதல் (e-NAM, சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள்), வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், சிறந்த விவசாயிகள் நடைமுறைகள், நஞ்சில்லா வேளாண்மை, போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படும். இதுதவிர முன்னணி வேளாண் தொழில் முனைவோருடன் கலந்துரையாடலும் நடைபெறும். இக்கருத்தரங்குகளில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


காட்சி, விற்பனை அரங்குகள்


உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்சார் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளில் தங்களது மதிப்புக்கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மூலிகை உணவுப் பொருட்கள், பழங்கள், பசுமைக் காய்கறிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், காய்கறி விதைகள், உயர் இரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விற்பனையும் மேற்கொள்வார்கள்.


மேலும், வேளாண் விளைபொருட்கள் விற்பனை, சந்தைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்துவதற்காக,வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புக்கூட்டும், பதப்படுத்தும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் வணிகர்கள் சந்திப்பும் நடைபெறும்.


வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு அருகாமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%